பல வருடங்கள் படித்து தலைமைச் சமையல் காரன் ஆனவனுக்குக் கூட... முதலாம் வகுப்பே படித்த அம்மாவின் கைப் பக்குவம் இல்லை...
என் நகம் வெட்டும் நான் உயர் ஜாதி... என் தலைமுடி வெட்டுபவன் கீழ்ஜாதி...?
நாளைக்கு நான் வேலைக்கு வேளைக்குப் போக வேண்டும் என்பதற்காக .... என் நித்திரையை குழம்பி விடாமல் நடுச்சாமத்தில் அழும் குழந்தையை அவசரப்பட்டு அணைக்கும்.. மனைவியின் அக்கறையை ரசிப்பதற்காகவே... விழித்துக் கொள்கிறது மனசு...
வேறு பெண்களைப் பார்த்தாலே சகோதரியாக நினைக்கும் மனசு வீதியில் நின்று ``போலாமா ?`` என்று கேட்கும் பெண்களை என்ன முறைகொண்டு நினைப்பது...?
என்ன வயித்தில எவ்வளவு பெரிய வெட்டு என்று பார்க்கிறீங்களா? அதொன்றுமில்லை வயிறு பெரிசா இருக்குதாம் என்ற சந்தேகத்தில செக் பொயிண்டில் (check point)வெட்டிப் பார்த்தவங்க.
இண்டைக்காவது ஒரு துளி பாலை வாயில காட்டு அம்மா
வாவ் ! இன்னும் கொஞ்ச நேரத்தில முந்தநாள் செத்துப் போன அம்மாவை போய்ப் பார்க்கப்போறேனே!
கடவுளே ! இண்டைக்காவது இந்தச் சொம்பில் அறைவாசிக்காவது கஞ்சி வாங்கிடனும். அப்பத்தான் குடும்பத்தில இருக்கும் அஞ்சு பேரும் சமாளிக்கலாம்.
100 பேர் இடம் பெயர்ந்து போகும் போது ஷெல் விழுந்து 60 பேர் செத்துப் போனால் மிஞ்சுவது 40பேர்தானே ரீச்சர்?
செத்துப் போய் விட்டோம் என்று கவலைப் படாதே தம்பி , நாம இனி கல்லறையில ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம்.
அங்கிள்! ஏழாவது அகதி முகாமில எட்டாவது குடிசையில ஒன்பதாவது குடும்பத்தில் இருக்கும் , என் அம்மாட்ட நான் செத்துப் போயிட்டான் என்று சொல்லி விடுங்கள் அங்கிள்.
அப்பா ! நான் இங்கே நாலாவது சவத்திற்குப் பக்கத்தில படுக்கிறன்.
நல்ல அங்கிள்! கால் கடுக்குது என்ற உடனேயே குந்தி இருக்க அனுமதிச்சிட்டார்.
பசியின் அவசரத்தில் நல்ல தரமான கடைக்கு போக அவகாசமில்லாமல் , நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலே இருந்த ஒரு சிறிய சாப்பாட்டுக் கடையில் சாப்பிடப் போனேன். சின்னக் கடையானாலும் சாப்பிட முன் பாத்திரத்தை சுடு நீரால் கழுவித்தான் தந்தார்கள். ஆனாலும் சாப்பாடு பரிமாறுபவர் வெறும் தண்ணியால் கை கழுவியே நிறைய நாட்கள் இருக்கும் போல இருந்தது. இருந்தாலும் என்ன பசியின் அவசரம் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.
சாப்பிடத் தொடங்கிவிட்டேன்! சாப்பிடும் போதுதான் கவனித்தேன் நான் இருந்த மேசைக்கு அருகில்தான் குப்பை போடும் வாளி இருந்தது. அந்தக் கடையில் பாத்திரத்தின் மேல் லஞ்ச் சீட் எனப்படும் மெல்லிய பொலித்தின் போட்டு அதிலேதான் சாப்பாடு பரிமாறுவார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் அந்த லஞ்ச் சீட்டை அப்படியே மடித்து அந்தக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கடமைக்கு ஒருதரம் பாத்திரத்தை சுடுநீரில் பந்தாவாக காட்டிவிட்டு மீண்டும் சாப்பாடு வழங்கப்படும் (எல்லாக் கடைகளையும் போல)
எனக்கு முன் சாப்பிட்ட நிறையப் பேரின் மிச்ச சாப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக முடியப்பட்டு அந்த வாளியில் கிடந்தது. ஈக்கள் மொய்த்து அவற்றை சுவை பார்த்துக் கொண்டிருந்தன. பார்ப்பதற்கே அருவருப்பாய் இருந்த அந்த காட்சியை தவிர்த்து விட்டு சாப்பாட்டைத் தொடர்ந்தேன்.
அப்போது ஒரு பிச்சைக்காரன் வந்து அந்த வாளியை தன் கையால் கிளறத் தொடங்கினான். அவன் கையெல்லாம் ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. நான் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன்! சற்று நேரத்தில் கொஞ்சம் அதிகமாக மிச்ச சாப்பாடு இருந்த சில முடிச்சுக்களை தெரிவு செய்து கொண்டு வெளியில் சென்றான். அங்கே கடைக்கு வெளியில் அவன் மனைவியும் , இரண்டு குழந்தைகளும் நின்றிருந்தார்கள்.
அவன் அந்த குப்பை வாளியில் கிடந்த முடிச்சுக்களை கொடுக்க அவர்கள் சந்தோசமாக சாப்பிடத் தொடங்கினார்கள். எனக்கு அந்த குழந்தைகள் குப்பைத் தொட்டியில் சாப்பிடுவதை நேரில் பார்த்தும் மனசு கனக்கத் தொடங்கிவிட்டது (இதற்கு முன் படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்).
நான் எனது சாப்பாட்டுக் காசைக் கொடுத்துவிட்டு , வெளியே வந்தபோது அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றியதால், என் பேர்சில் மாற்றப் பட்டு சில்லறையாக வெறும் பதினேழு ரூபாயே தேறியது.
சரி அதையாவது கொடுப்போம் என்று நெருங்கியபோதுதான் கவனித்தேன் , அந்தப் பிச்சைக்காரன் கையில் ஒரு புது சிகரெட் , அப்போதுதான் பற்றவைத்துக் கொண்டிருந்தான். அது இலங்கையில் பிரபலமான கோல்ட் லீப் எனப்படும் சிகரெட் வகை. அது ஒன்றின் விலை 18 ரூபாய், நான் கொடுக்க நினைத்ததோ வெறும் 17 ரூபாய்.
ஒரு யுத்தகள அனுபவம்! சுற்றிவர பல் குழல் பீரங்கிகள் சீறிப்பாயும் மின்சாரம் இல்லாத கொடுமையான இரவுகள். வீட்டுக்குள் அடங்கியே கிடக்கவேண்டிய பகல் பொழுதுகள் . அரிதாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கவே படை எடுக்கும் ஒட்டுமொத்த யாழ் மக்கள்.
நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்று யாழ்ப்பாணத்துக்கு வெளியில் இருக்கும் வீட்டுக்கு சொல்வதற்கு, எப்போதாவது அரிதாக கிடைக்கும் தொலைபேசி இணைப்பு.
ஆரம்ப கட்டத்தில் பண்பலைகள் கூட முடக்கப் பட்ட நிலையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஒரு சமூகமே தனித்து விடப் பட்ட உணர்வு.
இத்தனை கொடுமையான நிகழ்வுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் வாழப்பழகியது தமிழ் இனம். ஆரம்பத்தில் ஒரு நாளில் ரெண்டு மணிநேரமே வெளியில் செல்ல அனுமதித்த இராணுவம் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப் படும் நேரத்தை பல மணிநேரமாக்கியது.
ஊரடங்கு தளர்த்தப் பட்டு அதிக பகல் பொழுதுகளை வெளியில் கழிக்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், அதிர்கின்ற பல்குழல் பீரங்கிகளின் சத்தங்களின் நடுவிலே வீட்டுக்கு வெளியில் திரிவது எப்படி?
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியே செல்வதற்கான அத்தனை பாதைகளும் மூடப் பட்ட நிலையில், வதந்திகள் முளைக்கத் தொடங்கின...
செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் வருவதாகவும்,அல்லது ஏதோ ஒரு வெளிநாட்டுக் கப்பல் வருவதாகவும்,இந்தக் கப்பல் மூலம் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் , யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய யாழ்ப்பான மக்களும் பயணிக்கலாம் என்றும் முளைக்கத் தொடங்கிய இந்த வதந்திகள் இடையிடையே சின்ன சின்ன சந்தோசங்களை தரத்தான் செய்தன.
`` எல்லோரையும் ஏற்றிச் செல்ல கப்பல் வருமா?`` என்ற பாடல் இந்தியாவில் இருக்கும் அகதிகளுக்கு மட்டுமல்ல , எங்களுக்கும் பொருத்தமாகவே இருந்தது. சொந்த நாட்டில் இருந்தாலும் நாங்களும் அகதிதானே ?
பல வாரங்கள் இப்படியே கழிந்து போனது!
திடீரென ஒரு நாள் யாழ் நகரமே பரபரப்பானது....
காங்கேசன் துறை துறைமுகத்தில் இருந்து திருகோணமலைக்கு ஒரு கப்பல் பயணிக்க இருப்பதாகவும் அதிலே பயணிக்க விரும்பும் நபர்கள் உடனடியாக குறிப்பிடப்பட்ட ஒரு ராணுவ தளத்திற்கு வரும் படியும் கேட்கப் பட்ட யாழ் எப் . எம் எனும் அரச வானொலியின் அறிவுப்பே அந்த பரபரப்புக்கு காரணம்.
பயங்கரமான யுத்தம் நடைபெறும் நிலைமையில் ராணுவக் கப்பலில் பயணம் செய்வதா என்ற பயம் மக்களுக்கு கொஞ்சம் இருந்தாலும், அந்த நிலைமையில் நிறைய மக்களுக்கு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய தேவை இருந்ததை அந்தக் கப்பலில் பயணிப்பதற்காக கூடிய ஐந்து ஆயிரத்திற்கும் மேட்பட்ட மக்கள் தொகை காண்பித்தது.
பல ஆயிரம் மக்கள் கூடி விட்டாலும் குறிப்பிட்ட அளவு மக்களே பயணிக்கலாம் என்ற நிலையில் , எப்படியாவது பயணித்தே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் நசுபடத் தொடங்கினார்கள்.
பெண்கள் , குழந்தைகளோடு பெண்கள், வயதானவர்கள் என்று வித்தியாசம் இல்லாமல் மக்கள் நசுபடத் தொடங்கினார்கள். ஆயுதம் தாங்கிய ராணுவத்தாலேயே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு தமிழின நெரிசல் நிலவியது .
சொந்த நாட்டினுள்ளேயே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க ஒரு இனமே நெரிசலில் நசிபட்டு கொண்டிருந்தது. தமிழ் தாய் அதிகம் வலி உணர்ந்த நாட்களில் அதுவும் ஒன்றாக பதிவானது.
இறுதியாய் பல்வேறு நெருக்குதல்களுக்கு பிறகு பல ஆயிரம் மக்களில் இருந்து வெறும் ஒரு ஆயிரத்துக்கு அண்மித்த மக்களே தெரிவு செய்யப்பட்டனர்.
காலையில் தொடங்கிய மக்கள் தெரிவு, முடிய மாலை ஆகிப்போனது.
பயணிக்கும் வாய்ப்பைப்பெர்ற அனைவரின் உடமைகளும் யாழ் நகரில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் முற்று முழுதாக சோதிக்கப்பட்ட பின்பு அனைத்து மக்களும் பஸ் வண்டிகளிலே ஏற்றப் பட்டார்கள். ராணுவம் பஸ்சில் இருந்து கண்காணிக்க பஸ் தெல்லிப்பழை நோக்கி பயணத்தைத் தொடங்கியது. இதற்குள் ஊரடங்குச் சட்டத்திற்குரிய நேரம் தொடங்கி விட்டதால், வீதியெல்லாம் உறங்கிப் போய் மயானமாக காட்சி அளித்தது.
லேசாக இருட்டத் தொடங்கி விட்ட , வெறிச்சோடிய வீதியில், பஸ்ஸின் உள்ளே ராணுவம் கண்காணிப்பில் இருக்க , தூரத்தில் வெடிச் சத்தங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்க , பஸ் வண்டிகள் சீறிப் பாய்ந்தன தெல்லிப்பளை நோக்கி
தெல்லிப்பளை நெருங்கியபோது முற்றாக இருட்டி விட்டிருந்தது.
தெல்லிப்பளை வைத்தியசாலை உள்ள இடம்தான் மக்களுக்கான எல்லை, அதற்கு அப்பால் உள்ள அத்தனை இடமும் ராணுவம் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்ட இடங்கள்.
உயர் பாதுகாப்பு வலயம் என்பது, முற்று முழுதாக ராணுவத்தின் ஆக்கிரமப்பில் இருக்கும் இடம். அங்கேதான் அவர்களின் தலைமை அதிகாரிகளின் அலுவலகங்கள், ஆயுதக் கிடங்குகள் என்பவவை அமைந்திருக்கும்.
தெல்லிப்பளை, காங்கேசன் துறை மற்றும் பலாலி என்பவற்றை உள்ளடக்கிய உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மக்களுக்கு சொந்தமான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையம் கூட உள்ளடக்கப்படிருக்கிறது.இங்கேதான் ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் விநியோகிக்கப் படும் மார்க்கங்கள் அமைந்திருக்கின்றன.
அந்தளவிற்கு ராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்திற்கு நாங்கள் அழைத்துச்செல்லப்பட்டோம். மிகவும் இருட்டி விட்டதால் பஸ்ஸின் விளக்கு வெளிச்சத்திலேயே வீதியோரங்க்களை பார்க்க முடிந்தது. உடைந்த கட்டிடங்கள், வீட்டினுள்ளேயே வளர்ந்து நின்ற மரங்கள் , ராணுவச் சிப்பாய்கள் என்பவற்றைத் தவிர பார்ப்பதற்குஅங்கே வேறு எதுவுமே இல்லை.
கடைசியில் பஸ் தெல்லிப்பளையில் இருந்த ஒரு பாடசாலை கட்டிடத்தினுள் நிறுத்தப் பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கப்பலில் ஏறப்போகிறோம் என்ற எதிர்பார்ப்போடு இருந்த எங்களுக்கு இடையில் பஸ் நிறுத்தப் பட்டதும் கொஞ்சம் பதட்டம் பிடிக்கத்தொடங்கியது.
நாங்கள் தங்கி இருந்த கட்டடங்களுக்கு மிக அண்மையில் இருந்தும் பீரங்கிகள் முழங்கிக்கொண்டிருந்தன. சத்தத்தில் செவிப்பறை மென்சவ்வு உடைந்து விடும் உணர்வு. அன்றைய இரவுப் பகுதி ஒரு யுத்தகளத்திலேயே இருக்கும் உணர்வோடு கொஞ்சம் கொஞ்சமாய் கடந்து கொண்டிருந்தது....
பகுதி 2
சுத்திவர ஷெல் வீச்சுச் சத்தம், எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு குண்டு தவறுதலாக நாங்கள் தங்கி இருந்த கட்டடத்தினுள் விழுந்து வெடிக்கலாம் !
ஆனாலும் அங்கே தங்கி இருந்த ஒருவரின் முகத்தில் கூட அந்த பயம் இருப்பதை என்னால் உணர முடியவில்லை. கால காலமாய் யுத்த களத்திலேயே வாழ்ந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த ஒரு இன மக்களுக்கு , சுத்திவர ஷெல் வீச்சு நடைபெற நடுவிலே ஒரு கட்டடத்தில் தங்கி இருப்பது என்பது பழகிப் போன ஒன்றாகிப் போனது.
எங்களோடு நேரடித் தொடர்புகளை வைத்திருந்த ராணுவத்தினர் , ராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ராணுவ சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களே அன்று இரவு தங்கி இருந்த இடத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.
இலவசமாக உணவுப் பொதிகள் வழங்கப் பட்டன. தற்காலிக சிற்றுண்டி சாலை ஒன்றையும் ராணுவத்தினர் ஏற்படுத்தி இருந்தனர்.சில காலமாக கடைகளில் பொருட்களை அதிக விலை கொடுத்தே வாங்கி பழக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நியாயமான விலையில் பொருட்களை ராணுவ கடையில் கண்டவுடன் இருப்புக் கொள்ளவில்லை. குறிப்பாக சிக்கிரட் புகைப்பவர்களுக்கு பெரிய கொண்டாட்டம் ஆகிப்போனது.
இப்படி ஒரு உச்ச கட்ட யுத்த பிரதேசத்திலும் நம் மக்கள் திருப்தியாக ஒரு இரவைக் கழிப்பதை பார்க்க எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அப்படியே நேரம் நடுசாமத்தைக் கடந்தவுடன், எல்லோரையும் பஸ் வண்டியினுள் ஏறும் படி ராணுவம் அழைத்தது. மீண்டும் பஸ் வண்டியின் விளக்கு வெளிச்சத்திலேயே வீதியோரங்களைப் பார்த்தபடி பத்து நிமிடப் பயணம்.
பஸ் வண்டி காங்கேசன் துறைத் துறைமுகத்துக்கு சற்று முன் ( கிட்டத்தட்ட 200m இருக்கும் ) நிறுத்தப்பட்டன. அங்கே மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப் பட்டோம். அப்போது அருகில் நின்ற ஒரு ராணுவ வீரரிடம் கேட்டேன் ` ஏற்கனவே சோதித்து விட்டீர்கள் தானே ? `` மீண்டும் எதற்கு இந்தச் சோதனை என்றேன்.
அதற்கு அவர் `` முன்பு சோதனை செய்தது நாங்கள் ( தரைப் படை) , இப்போது சோதிப்பது கடற் படை`` என்றார்.
சோதனையின் போது , கூரிய ஆயுதங்கள் , பட்டறி போன்றவைதடை செய்யப் பட்டன. சேவிங் ரேசர் கூட கூரிய ஆயுதமாக தடுக்கப்பட்டது.
அத்தோடு அந்த இடத்திலேயே வைத்து அனைவரின் கைத்தொலைபேசிகளும் வாங்கி எடுக்கப் பட்டன. அதுவரை கைத்தொலைபேசி எங்களிடம் இருந்தாலும் , அப்போது யாழ் மண் முழுவதும் இணைப்பு துண்டிக்கப் பட்டு இருந்தது.வாங்கி எடுத்த கைத்தொலைபேசி, கமரா போன்றவை பக்குவமாக பொலித்தின் பைகளில் அடைக்கப் பட்டு, அதற்குரிய அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப் பட்டன.
நடு இரவில் நடு வீதியில் வைத்து சோதிக்கப் பட்டோம். ஆரம்பத்தில் சோதிக்கப்பட்டவர்கள் எஞ்சிய ஆயிரக் கணக்கானவர்களின் சோதனை முடியும் வரை வீதியோரம் இருத்தப் பட்டோம். நிறையப் பேர் தங்கள் பயணப் பைகளை தலையனையாக்கி வீதியிலேயே உறங்கத் தொடங்கி விட்டனர்.
சில மணி நேர சோதனைக்குப் பிறகு, எல்லோரும் பஸ்சில் மீண்டும் ஏற்றப் பட்டு துறை முகத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டோம்.
அப்பாடா! ஒருமாதிரியாய் வந்து சேர்ந்து விட்டோம். ஆனாலும் வெறும் 40km தூரத்திற்கும் குறைவான இடத்தில் உள்ள துறைமுகத்தை அடைவதற்கு நாங்கள் செலவழித்தது 24 மணி நேரம்.
அங்கே நாங்கள் பயணிப்பதற்காக காத்திருந்த கப்பல் ராணுவத்திற்கு பொருட்கள் ஏற்றி வருகின்ற கப்பல். மளிகைச் சாமான்கள் ஏற்றிவர பயன் படுத்தப்படும் கப்பல் என்பதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிப்பதற்கான எந்த வசதியும் அதில் இல்லை.
கப்பலின் மேல் தளத்தில் சிலர் ஆண்களும், ஒருசில மனத்தைரியம் வாய்க்கப் பட்ட பெண்களும் உட்கார்ந்து கொள்ள , எஞ்சியவர்கள் கீழ் தளத்திற்கு அனுப்பப் பட்டார்கள். மா , மற்றும் சீனி மூடைகள் அடுக்கப்பட வேண்டிய இடத்தில் மக்கள் அடுக்கப் பட்டார்கள்.
கப்பலில் எங்கெல்லாம் உட்கார முடியுமோ அங்கெல்லாம் ஒவ்வொருவராக உட்கார்ந்து கொண்டோம்.
அனைவருக்கும் உயிர் காப்பு அங்கிகள் கடற்படை வீரர்களால் வழங்கப் பட்டன. கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கியது. நாங்கள் இருந்த கப்பலுக்கு சற்றுத் தொலைவில் ராணுவத்தின் டோராப் படகுகள் கடலைக் கிழித்துக் காயப்படுத்திய படி அதிவேகமாக சென்றன. ( அந்த டோராப் படகுகள் எங்கள் பாதுகாப்புக்காக செல்வதாக படையினர் சொல்லிக் கொண்டனர்?)
கரையில் தெரிந்த விளக்கு வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போக சூரிய வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படத்தொடங்கியது. சூழ்ந்து வந்த டோராப் படகுகளும் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு மறைந்து போயின.
சூரிய வெளிச்சம் முற்றாக வெளிப்பட்டபோது எங்கள் கப்பலை சுற்றி தண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை.கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் தான்.
நிறையப் பேருக்கு இதுதான் முதல் கப்பல் பயணம் என்பதால் , நிறையப் பேர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தனர் .வாந்தி எடுப்பதற்காக ராணுவத்தால் பொலித்தீன் பைகள் வழகப்பட்டன . வாந்தியை கட்டுப்படுத்த `பெனார்கன் ` எனப்படும் மாத்திரைகளையும் வழங்கினர்.
மேல் தளத்தில் ஓரமாக இருந்தவர்களை இடையிடையே கடல் நீர் குளிப்பாட்டிச் சென்றது.
நானும் மேல் தளத்தின் நடுவிலே மேடை போல இருந்த ஒரு பகுதியில் சாய்ந்து கொண்டுதான் இருந்தேன். இருட்டில் அது என்ன இடம் என்று நான் அறிந்திருக்கவில்லை.
நன்கு விடிந்ததன் பிறகுதான் பார்த்தேன் , நான் சாய்ந்து இருந்தது, கப்பலில் பொருத்தப் பட்டிருந்த பீரங்கியில் . மிகவும் பெரியதான அந்த பீரங்கியின் மேல் பகுதி பொலித்தின் உறையால் மூடி வைக்கப் பட்டிருந்தன. அதன் அடிப்பகுதியிலேதான் நானும் சிலரும் சாய்ந்து கொண்டிருந்தோம்.
அதை அறிந்த பின்பும் அப்படியேதான் இருந்தோம், வெறும் தளத்திலே இருக்கும் எங்களுக்கு அது சாய்மனைக் கதிரையாக இருந்தது. மேலும் வரப் போகின்ற வெயிலுக்கு அது கொஞ்சம் நிழல் வழங்கும் என்ற நம்பிக்கையில் அப்படியே சாய்ந்து கொண்டிருந்தோம். ( எத்தனை உயிர்களைக் காவு கொண்ட பீரங்கியோ என்றெல்லாம் யோசிக்கும் மனநிலையில் நாங்கள் இருக்க வில்லை!)
அப்போதைய எங்கள் மனநிலைமை எப்போதுடா கரை தெரியும் என்றே ஏங்கிக் கொண்டிருந்தது. எந்தத் திசையில் கரை தெரியும் என்றே புரியாமால் எல்லோரும் சுற்றிவர பார்த்துக் கொண்டே இருந்தோம்! சற்று அனுபவம் வாய்ந்த ஒருவர் , அதோ கரை என்றார்! அந்த திசை நோக்கிப் பார்த்தோம், ஏதோ போல தெரிந்தது. ஓ இதுதான் கரையா என்பது போல எல்லோரும் அந்த திசையையே வெறிச்சுப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அவர் சொன்னது சரிதான் , கொஞ்சம் கொஞ்சமாக அந்த புள்ளி பெரிதாகி கொண்டே இருந்தது. புள்ளியாய் நாங்கள் பார்த்த கரை இப்போது காடாக காட்சி அளிக்கும் அளவுக்கும் கரையை நெருங்கி விட்டிருந்தோம்.
அப்பாடா இன்னும் கொஞ்ச நேரத்தில் கரை தொட்டு விடுவோம் , பீரங்கிகள் வெடிக்கும் சத்தம் , தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் எல்லாம் இனி தொடர்ந்து கேட்க வேண்டி வராது என்று மனது துள்ளிக் குதித்தது. அதோடு மனசு சிறுபிள்ளைத்தனமாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மீன் சாப்பிடலாம், சோடா குடிக்கலாம் என்றெல்லாம் வேறு சந்தோசப் படத்தொடங்கியது.
துறைமுகம் தெரிவதாய் சிலர் சுட்டி காட்டினர். ஏதோ நாங்கள் எல்லாம் கொலம்பஸ் ,புதிதாக ஒரு தேசம் கண்டு பிடித்து விட்டோம் என்பது போல்தான் எங்கள் மனசு துள்ளிக் குதித்தது.
அப்போதுதான் திடீரென சில கடற்படை வீரர்கள் வந்து பீரங்கிக்கு அருகில் இருந்தவர்களை எல்லாம் விலகி இருக்குமாறு கூறி, பீரங்கி மூடப் பட்டிருந்த பொலித்தின் உறையை நீக்கினர். ஒரு வீரர் தலைக் கவசம் அணிந்து பீரங்கியில் ஏறி உட்கார்ந்து பீரங்கியில் குறி பார்க்கத் தொடங்கினார்.
அந்த நேரத்தில் கண்ணுக்கெட்டாத தொலைவில் எங்கள் கப்பலைச் சூழ வந்து கொண்டிருந்த டோராப் படகுகள் மீண்டும் எங்கள் கப்பலை நெருங்கி வரத் தொடங்கின.
எல்லோரும் பீரங்கிக்கு சில மீற்றர் தூரத்திலே உட்கார்ந்து கொண்டு ஏதோ தாக்குதல் நடைபெறப் போகிறதோ என்று பயந்து கொண்டிருந்தோம்.
அப்போது அருகிலே நின்ற ஒரு கடற் படை வீரரிடம் என்ன நடைபெறுகிறது என்று வினவினேன். அதற்கு அவர்`` பயப்பட வேண்டாம் , சம்பூர் பகுதியை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம் , ஏதாவது தாக்குதல் நடைபெற்றால் தடுப்பதற்கான ஒரு முன் ஏற்பாடே இது ` என்றார்.
சற்று நேரம்தான் அந்த பதட்டம், சம்பூர் கடந்தபிறகு படைவீரர் பீரங்கியை விட்டு இறங்கினார் , அப்போது துறைமுகமும் மிகவும் நெருங்கி விட்டது.
சீனக் குடா இறங்கு துறையில் கப்பல் நிறுத்தப்பட்டது. நாங்கள் ஒவ்வொருவராக கப்பலில் இருந்து இறங்கும் பொழுது கப்பலில் இருந்த ஒலிபெருக்கியில், `` இவ்வளவு ஒரு கடினமான பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய உங்களுக்கு நன்றிகள்`` என்று ராணுவம் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.
இறங்கியவுடன் காங்கேசன் துறையில் வைத்து எங்களிடம் வாங்கப்பட்ட கைத்தொலைபேசிகளை பத்திரமாக திருப்பி வழங்கினார்கள்.
இறங்குப் போது போது பல ஊடகங்களால் படம் பிடிக்கப் பட்டோம், அடுத்த நாள் பத்திரிகைகளின் முதல் பக்கம் பிரசுரிக்க படம் தயாராகிக் கொண்டிருந்தது .
சில ஊடகங்கள் நேரடியாக எங்கள் அனுபவங்களைக் கேட்டறிந்து பதிவு செய்து கொண்டிருந்தார்கள். என்னதான் கடினமான பயணம் என்றாலும் அதை மிகவும் இக்கட்டான நிலையிலும் ஒழுங்கு செய்திருந்த ராணுவத்தினருக்கு நன்றி சொல்லாமல் செல்ல மனசு இடம் அளிக்கவில்லை.
துறை முகத்தினுல்லேயே சில தனியார் வாகனங்களை அனுமதித்து , திருகோணமலை நகருக்குள் செல்வதற்கான பயண வசதிகளையும் ராணுவத்தினர் ஏற்படுத்தி வைத்திருந்தனர். சில தூர இடங்களிற்கான (கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா போன்றவற்றிற்கு )பயண வசதிகளும் நேரடியாக துறை முகத்திலேயே ஏற்படுத்தப் பட்டிருந்தன.
இறுதியாக எல்லோரும் தங்கள் பயணிக்க வேண்டிய பஸ் வண்டியினுள் ஏறிக் கொண்டோம்!
பலவருடயுத்தநிறுத்தத்திற்குபிறகு யாழ்ப்பாணத்தில் மீண்டும்யுத்தம்வெடித்துA9வீதிஉட்படஅனைத்துதரைமார்க்கமும்மூடப்பட்டபிறகுராணுவத்தால்ஆரம்பிக்கப்பட்டராணுவக்கப்பல்பயணஅனுபவங்களைபதிகிறேன்.
உங்கள் குழந்தைகள் வளர்ந்த பிறகு எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடிக்கும் என்று இப்போதே அனுமானித்துக் கொள்ள ஆசையாக உள்ளதா?
நல்லது
அதை அறிந்து கொள்ள இணையத்தில் நான் கண்ட ஒரு கணி பொறியை சொல்லுகிறேன்.
அதற்கு முன் சில அறிவுரைகள்,
இது கணித்துச் சொல்லுவது வெறுமனே , குழந்தை எவ்வளவு உயரத்துக்கு வளர்வதற்கான பாரம்பரியத் தகுதி பெற்றுள்ளது என்பதை மட்டுமே. குழந்தைக்கு வழங்கப் படும் போசாக்கு மற்றும் குழந்தையை பாதிக்கும் வேறு நோய்கள் போன்றவைகளே குழந்தை அந்த உயரத்தை எட்டிப் பிடுக்குமா என்பதை தீர்மானிக்கும்.
இந்த லிங்கில் சென்று அங்கே கிடைக்கும் கணிப்பானில் குழந்தையின் அம்மா மற்றும் அப்பாவின் உயரத்தை பதிவதன் மூலம் , எவ்வளவு உயரம் வரை உங்கள் குழந்தை வளரும் சாத்தியம் உள்ளது என்று அறிந்து கொள்ளுங்கள்.
குழந்தையின் வளர்ச்சி பற்றிய சந்தேகங்களை பின்னூட்டத்தில் கேளுங்கள்.