11.28.2010

என் லிவ்விங் டுகெதர் பார்ட்னருக்கு ஒரு கடிதம்

உனக்கென நான்
இருப்பேன்
எனக்கென
நீ இரு
என்றாய்...

மனம்
ஒத்தபின் எதற்கு
மணம் என்றாய்
ஒத்துக்கொண்டேன்...

பிரச்சினைவந்தால்
பிரிந்துவிடலாம்
என்ற ஒப்பந்தம்
போடாவிட்டாலும் ...
அதைபற்றி நாம்
பேசாவிட்டாலும் ....
கையில் இருந்த
வேலை தந்த
தைரியத்திலும்...
மனதில் இருந்த
காதல் தந்த
தைரியத்திலும்
சேர்ந்தே
வாழ்ந்தோம்...

ஆசை அறுபதுநாள்
மோகம் முப்பதுநாள்
அல்ல
அதற்கு மேலேயே
வாழ்ந்தோம்...

இரண்டு குழந்தைக்கு
நான் அம்மாவாகிப்
போகும்வரை
ஒத்துப்போன
நம் மனது
கொஞ்சம் கொஞ்சமாய்
முரண்படத்
தொடங்கியது...

ஒத்துவராத வாழ்க்கை
இலகுவாக
பிரிந்துவிட்டாய்...

நீ எங்கேயோ
என்னைப்போல
இன்னொருத்தியைத்
தேடிக் கொண்டிருக்கலாம்
அல்லது
இந்நேரம்
கண்டே பிடித்திருக்கலாம்.

நான்
அழவில்லை
ஏனெறால் நான்
புதுமைப்பெண்...

இருபத்திஎட்டு
வயதில்
யார் யாரோ
சொல்லப்போகும்
வார்த்தைகளையும்
கேவலமான
பட்டங்களையும்
ஒதுக்கிவிடும்
பக்குவம் எனக்கு
இருக்கிறது....

என் கவலையெல்லாம்
என் பெண்
பதின்மூன்று
பதினான்கு
வயதளவில்
கேட்கப்போகும்
அவச் சொட்களை
உதாசீனப்படுத்தும்
பக்குவத்தை
பெறுவாளா?

என்னதான்
புதுமைப்
பெண்ணாக
இருந்தாலும்
என் அப்பா
யார் என்று
கேட்கும்
பையனிடம்...
அப்பாவிற்கு அம்மாவைப்
பிடிக்கவில்லை
அதனால் விட்டு விட்டு
இன்னொரு அம்மாவைத்
தேடித் போய்
விட்டார் என்று
சொல்லும்
தைரியமும்
எனக்கில்லை..



பிள்ளைகளுக்கு
தெரிந்துகொள்ளும்
வயதுவரும் முன்னே
யாருக்கும்
தெரியாத
ஒரு ஊரில்
குடியேறிவிட்டேன்..

இருந்த வேலைதான்
போய்விட்டது
இருந்தாலும்
கவலையில்லை
கூலி வேலை
செய்தாவது
பிள்ளைகளை
வளர்த்து விடுவேன்...

ஆனால்
அவர்களை
அப்பா இறந்துவிட்டார்
என்று சொல்லியே
நம்பவைத்திருக்கிறேன்...

என்னவனே
இரண்டுவருடம்
என்னோடு வாழ்ந்ததிற்கு
ஜீவனோபாயமாக
நான் கேட்பது
தயவுசெய்து
இந்த ஊருக்குமட்டும்
வந்து
நீதான் என்
குழந்தைகளுக்கு
அப்பா என்று
தெரியப்படுத்தி விடாதே

இப்படிக்கு
உன் கடந்தகால
காதலி/மனைவி/ பார்ட்னர்
தோ ஒன்று...

11.10.2010

வெட்கத்தின் வார்த்தைகள்..

நீ வரமாட்டாய்
என்று
தெரிந்தும்
காத்துக் கொண்டிருக்கிறேன்
இந்த ஏமாற்றத்தையாவது
எனக்காகத்
தருகிறாயே
என்ற
சந்தோசத்தோடு...

என்ன
வரம்
வேண்டும்
என்ற
கடவுளிடம்
உன்னைக் கேட்டேன்
மன்னித்துக்கொள்
வரம் மட்டுமே
தர முடியும்
தேவதையைத்
தரமுடியாது
என்று சொல்லி
மறைந்துவிட்டான்
கடவுள்


ஆண்கள்
கற்பழிப்பதைப்
போன்றதுதான்
பெண்கள்
காதலை
மறுப்பதும் ...

நீ
வெட்கத்தில்
முகத்தை மூடிய
பின்னும்
வெளியில்
தெரிந்துகொண்டேதான்
இருக்கிறது
வெட்கம்..

மௌனம்
உன் வெட்கத்தின்
வார்த்தைகள் ...

கடந்துபோகும்
அந்த
அவகாசத்தில்
எப்படி
என்னைக் கடத்திப்
போகிறாய்...

என் இதயத்தின்
நீ இருக்கும்
அறையைவிட்டு விட்டு
மற்ற
மூன்று அறைகளையும்
மூடிவிட்டேன்....
கோயிலுக்கு
ஒரு கர்ப்பக்
கிரகம்தான்
இருக்கவேண்டும்...


எனக்கு
இன்னும் நிறைய
உயிர் வேண்டும்
உனக்காக
விடுவதற்காக


11.03.2010

தீபாவளிச் சிறப்புக் கவிதைகள்


நீ
வாழ்த்துச்
சொல்லாத
தீபாவளி
சாதாரண
நாளாகிப்
போனது
நீ
வாழ்த்துச்
சொன்ன
சாதாரண
நாள்
தீபாவளியாகிப்
போனது..


நீ
தீபம் ஏற்றும்
வரைக்
காத்துக்
கொண்டிருக்கும்
தீபாவளி
தன்னைக்
கொண்டாட


சனங்களுக்கு
ஒருநாள்
தீபாவளி
தினங்களுக்கு
நீ
வரும்நாள்
எல்லாம்
தீபாவளி




நீ போட்ட
தீபாவளிக்
கோலத்தைக்
கலைத்துவிட
முடியாமல்
ரசித்துக்
கொண்டிருக்கின்றன
எறும்புகள்...

நீ என்னைச்
சேரும் வரை
காத்துக்கொண்டிருக்கும்
எனது தீபாவளி
கொண்டாடப்படுவதற்காக

தீபாவ(லி)ளி



தீபங்கள் அல்ல
சூரியன்களே
வந்தாலும்
ஒளி ஏற்ற
முடியுமா
இவர்களின்
வாழ்க்கையை....



இன்றைக்குத்தான்
இவளுக்குத்
தீபாவளி

பிச்சைக் காரனுக்கு
மட்டும்தான்
நிஜமான
தீபாவளி
மிச்சமாய்
நிறையக் கிடைக்கும்


தீபாவளிக்
கொண்டாட்டங்கள்
முடிந்தபின்னும்
தொடரும்
அதற்காக
வாங்கிய
கடன்கள்...


ஒரு அசுரன்
அழிந்ததைக்
கொண்டாடுகிறோம்...
அழிந்தது
அந்த ஒரு
அசுரன்
மட்டுமே
என்பதை
உணராமல் ..

தீபங்கள்
ஒளி ஏற்றட்டும்
இல்லங்களையல்ல
வாழ்க்கையை...







11.01.2010

ம் ....


நீ
பேசாமல் போனாய்
புரிந்துகொண்டேன்
பேசிவிட்டுப் போனாய்
குழம்பிப் போனேன்


எல்லோருக்கும்
பேசுவதற்கு ஒரு
மொழி தேவைப்படும்
உனக்கு மட்டும்
பேசாமல்
இருப்பதற்கு
ஒரு மொழி
தேவைப்படுகிறது...


உன்னிடமிருந்து
ஏதாவது
தவறி விழும்
போதெல்லாம்
ஒரு கவிதை
விழுந்து
தற்கொலை
செய்துகொள்கிறது...

நீயே
தவறிவிழும்
போது...
என் மனது
விழுந்து
தற்கொலை
செய்துகொள்கிறது

உன்னோடு
வாழ்வதற்கான
இறுதி முயற்சி
மரணம்