7.02.2009

தெருவில் கிடக்கும் தமிழன்

தமிழன் -நான்
அதனாலேயே
தலை குனிந்து
போகவேண்டியவன்
நான்...


குண்டுச் சத்தமே
தாலாட்டு
என்றெண்ணிய
எங்கள் குழந்தைகள்
தாயின் தாலாட்டை
நிராகரிக்கின்றன...


வீடு கட்டி
விளையாடச்
சொன்னால்
இல்லை இல்லை
அகதிமுகாம்
கட்டியே
விளையாடுவோம்
என்றே...
அடம் பிடிக்கின்றன
எங்கள்
குழந்தைகள்...
அகதி முகாமிலேயே
வாழப் பழகிய
எங்கள் குழந்தைகளுக்கு
அந்நியமாகிப்
போனது வீடு


சிரிப்பது என்றால்
என்ன அம்மா?
என்கிறது ....
மூன்று வயதாகியும்
இன்னும்
சிரிக்கச் சந்தர்ப்பம்
கிடைக்காத
ஒரு குழந்தை...


மூன்று வேளையும்
சாப்பாட்டுக்குப்
பிறகு..
என்று வைத்தியர்
கொடுத்த
மருந்தை
ஒருவேளை மட்டுமே
சாப்பிடும்
குழந்தைக்கு
எப்படிக்
கொடுப்பதாம் ...?


பாலே இல்லாமல்
செத்துப் போன
குழந்தைகளுக்கு
பால் ஊற்றுவது
எப்படி..


எட்டு வயதைக்கூட
எட்டிப் பிடிக்க
முடியாமல்
எங்கள்
குழந்தைகள்
செத்துப் போக
சிலபேர்..
வெட்கமில்லாமல்
எண்பத்தாறு
வயதையும்....
பார்ட்டி போட்டு
கொண்டாடுகிறார்கள்..


போட்ட
குண்டுச் சத்தம்
போதாதென்று...
சிலர்
வெற்றியை
பட்டாசு சத்தம்
கேட்டுக்
கொண்டாடுகிறார்கள்....

மரணத்தின்
அவசரம் புரியாமல்
தொலைபேசி இருக்க
கடிதமும்
தந்தியும்
அனுப்பிய...
முட்டாள்கள்
நாங்கள்...


மிருகக்காட்சி
சாலைக்குள்
இருக்கும்
மிருகங்கள் கூட
சிலவேளைகளில்
வெளியே வரும்....
முட்கம்பிக்குள்
இருக்கும்
எங்கள் மக்கள்
எப்போது
வெளியே
வருவார்கள்....?


9 comments:

இது நம்ம ஆளு said...

வீடு கட்டி
விளையாடச்
சொன்னால்
இல்லை இல்லை
அகதிமுகாம்
கட்டியே
விளையாடுவோம்
என்றே...
அடம் பிடிக்கின்றன
எங்கள்
குழந்தைகள்...
அகதி முகாமிலேயே
வாழப் பழகிய
எங்கள் குழந்தைகளுக்கு
அந்நியமாகிப்
போனது வீடு

தமிழன் -நான்
அதனாலேயே
தலை குனிந்து
போகவேண்டியவன்

உண்மை.

S.A. நவாஸுதீன் said...

வலி நிரம்பி வழிகிறது வரிகளில். சிலருக்கு சாட்டையடி கொடுத்திருப்பதும் தெரிகிறது. என்ன சொல்லி என்ன பயன் மயாதி. இவர்களும் தலை குனிந்துதான் இருக்கின்றார்கள் ஆனால் அது தமிழன் என்பதால் அல்ல.

S.A. நவாஸுதீன் said...

மரணத்தின்
அவசரம் புரியாமல்
தொலைபேசி இருக்க
கடிதமும்
தந்தியும்
அனுப்பிய...
முட்டாள்கள்
நாங்கள்...

உப்புக்கு சப்புக்காக உளறுபவர்கள்.

Suresh Kumar said...

பாலே இல்லாமல்
செத்துப் போன
குழந்தைகளுக்கு
பால் ஊற்றுவது
எப்படி..//////////////

வேதனையே வாழ்க்கையாகி போன தமிழினம் என்று தான் விடியல் பெறுமோ ? போராடுவோம் ஒருநாள் விடியல் பெறுவோம்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் கவிதை இது.
'' தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா''
என்று மாற்றி பாடலாம் அல்லவா ?

//பாலே இல்லாமல்
செத்துப் போன
குழந்தைகளுக்கு
பால் ஊற்றுவது
எப்படி..//
முக்கியமாக இந்த வரிகள் மனதைக் கலங்க வைக்கிறது. என்ன தப்பு செய்தார்கள் இந்தக் குழந்தைகள்?

Arun said...

சிரிப்பது என்றால்
என்ன அம்மா?
என்கிறது ....
மூன்று வயதாகியும்
இன்னும்
சிரிக்கச் சந்தர்ப்பம்
கிடைக்காத
ஒரு குழந்தை..

என்னை கண் கலங்க வைத்த வரிகள்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

மயாதி...பின்னூட்டம் இட முடியவில்லை..விழிகளை மறைக்கிறது உப்பு நீர்

சுசி said...

பிரமாதம் மயாதி.
கவிதையின் தொடக்கத்திலேயே மனசு தவிச்சுப் போச்சு. என் உறவுகளை நினைச்சு எத்தனையோ நாள் வாய் விட்டு கதறி அழுதிருக்கிறேன். என்ன பாவம் செய்தார்கள் அவர்கள் தமிழராய் பிறக்க. தொலை தேசத்தில் இருந்து அழ மட்டும் முடிந்த என் நிலையை என்னவென்று சொல்வேன்?! இந்தக் கவிதைய படிக்கிற எல்லாருமே அவங்களுக்காக பிரார்த்தனை பண்ணுவாங்கன்னு நம்பறேன்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//எண்பத்தாறு
வயதையும்....
பார்ட்டி போட்டு
கொண்டாடுகிறார்கள்//

வரிகளில் வலி கொஞ்சம் அதிகம் ...