6.15.2009

சினிமாப் படங்களில் மருத்துவக் காட்சிகள்

நேற்று தித்திக்குதே என்ற படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை பார்க்க வேண்டிய கொடுமையான ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அந்த காட்சியில் கதாநாயகன் வலியில் அவதிப்பட்டு முனகும் பொழுது வைத்தியர்கள் நெஞ்சை அழுத்தி CPR எனப்படும் மருத்துவ உதவி அளிக்கிறார்கள் .
அந்த நிலையில் உள்ள ஒருவருக்கு அந்த செய்முறை தேவையே இல்லை.

அது
மட்டும் தான் என்று பார்த்தால் இல்லை அதற்கு பிறகு நாயகன் இறந்து விட்டதாக வைத்தியர்கள் சொல்லிவிட்டு சென்றபிறகு, நாயகி கோயிலிலே இருக்கும் சிலையை பார்க்கிறாள், அந்த இடத்திலே ஒரு சின்னவயசு பிளாஷ் பக் வேறு , பிறகு அங்கிருந்து சிலையை எடுத்துக் கொண்டு நாயகன் அருகிலே வைக்க நாயகன்உயிர் பெறுகிறார் .எப்படியோ இதற்கு பத்து நிமிடங்களுக்கு மேல் தேவை ( இதெல்லாம் நாங்க எத்தனை படத்தில பார்த்திட்டம் , இதைப் போய் பெரிசாக்கிட்டு என்று நீங்கள் முனு முணுப்பது கேட்கிறது).

நிஜத்தில் இது சாத்தியமா?

நான் சில மருத்துவ ரீதியான தகவல்களை சொல்லுகிறேன் , அதற்குப் பிறகு இதற்கான விடை உங்களுக்கே புரியும்.

உண்மையில் வைத்தியர் இறப்பு என்று சொல்வது என்ன?
ஒருவருடைய இதய தொழிற்பாடு(துடிப்பு) மற்றும் சுவாசித்தல் என்ற தொழிற்பாடு நிரந்தரமாக நிற்பதையே இறப்பு என்பதற்கு என்னால் கொடுக்கக் கூடிய ஆகவும் எளிய விளக்கம்.

இங்கே நிரந்தரமாக என்ற சொல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தொழிற்பாடு என்பவை தற்காலிகமாக நிற்கலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் முதல் உதவி மற்றும் மேலதிக மருத்துவ வசதிகள் மூலம் நின்று போன இதய மற்றும் சுவாசத் தொளிட்பாடுகளை மீண்டும் தொழிற்பட செய்து அந்த நோயாளியின் உயிரை சாத்தியமா முடியும்.

இந்த இடத்தில்தான் முக்கிய பிரச்சனையே , அதுதான் இதய மற்றும் சுவாச இயக்கம் நின்ற பின் எவ்வளவு நேரத்திற்குள் நாம் முதலுதவியோ மருத்துவ உதவியோ வழங்குகிறோம் என்பதை பொறுத்தே அந்த நோயாளி உயிர் பிழைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ஒருவரின் இதய மற்றும் சுவாச தொழிற்பாடு தடைப்பட்ட பின் எவ்வளவு நேரத்துக்குள் முதல் உதவி வழங்கப் பட வேண்டும்?

ஒருவரின் இதய மற்றும் சுவாச இயக்கம் நிற்கும் போது , அவரின் உடலுக்கு ஒட்சிசன் கிடைப்பது தடைப்பட்டு போகிறது. அது மட்டுமல்ல கலங்கள் சுவாசிப்பதற்கான வேறு பதார்த்தங்களும் குருதியால் எடுத்துச் செல்லப் படுவது தடைப்படுகிறது.

இவ்வாறு ஒட்சிசன் இல்லாமல் நமது மூளையால் வெறும் மூன்று நிமிடங்களே தாக்குப்பிடிக்க முடியும். நான்காவது நிமிடத்தில் இருந்து மூளை பாதிக்கப்பட தொடங்கும். அதாவது ஒருவரின் இதயம் மற்றும் சுவாசம் நிற்கும் பட்சத்தில் அவருக்குரிய மருத்துவ உதவி (முதல் உதவி) முதல் ஒரு சில நிமிடங்களுக்குள் வழங்கப் பட்டால் மட்டுமே அவரின் மூளை பாதிக்கப் படாமல் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது.

நேரம் செல்ல செல்ல அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்துகொண்டே போகும். இங்கு நேரம் என்பது செக்கன்கள்.ஒவ்வொரு செக்கன் துளிகளும் முக்கியமானவை.

ஐந்து அல்லது ஆறு நிமிடங்களின் பின் கூட ஒருவர் பிழைக்கலாம் ஆனால் அவரின் மூளை நிச்சயமாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய சந்தப்பமே உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் வீணடிக்கப் படும் ஒவ்வொரு செக்கனும் அவர் உயிர் இழப்பதற்கான சந்தர்ப்பத்தை பல மடங்கு கூட்டி விடும்..

எது எப்படியோ ஒருவரின் இதயம் மற்றும் சுவாசம் நின்று பத்து நிமிடங்களுக்கு பின் உயி பெறுவது என்பது நம் சினிமா படங்களுக்கே பொருத்தம்.

மற்றும் ஒருவரின் இதயம் மற்றும் சுவாசம் என்பவை மீண்டும் இயக்கம் பெறுவது என்பது தனியே மருத்துவ வசதியில் மட்டுமே தங்கி இல்லை. முக்கியமாக என்ன காரணத்திற்காக அவரின் இதய மற்றும் சுவாச தொழிற்பாடுகள் இடையில் நின்று போனது எனபதிலும் தங்கியுள்ளது.

அதாவது சில காரணங்களால் இதய மற்றும் சுவாச தொழிற்பாடு நிற்கும் போது அவற்றை மீண்டும் இயக்கம் பெற வைக்க முடியாது, எவ்வளவு நேரத்துடன் மருத்துவ வசதி இருந்தாலும். ( என்னென்ன காரணங்களால் ஒருவரின் இதய துடிப்பு நின்று போகலாம் என்று அடுத்த இடுகையில் இடுகிறேன்)

முடிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒருவர் இதயம் மற்றும் சுவாசம் நிற்கும் போது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முதல் உதவி அளிக்கப்பட வேண்டும். ஆகவே உங்களின் அருகே உள்ள ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முதல் உதவியை ஆரம்பிக்க வேண்டும்.

சரி ஒருவருக்கு இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் நின்று விட்டது என்று எவ்வாறு கண்டு பிடிப்பது?

அப்படிப்பட்ட ஒருவருக்கு என்ன செய்ய வேண்டும்?( அதுதானே சிவாஜி படத்தில பார்த்துட்டம் என்று சொல்லுறீங்களா? )

சிவாஜி படத்தில் நீங்கள் பார்த்தது நிஜத்தில் சாத்தியமா ?

கரன்ட் கொடுப்பதன் உண்மை விளக்கம் என்ன ?

விடைகளோடு இன்னும் ஒரு இடுகையில் சந்திக்கிறேன்.




6 comments:

அமுதா said...

நல்ல பகிர்வு. உடனே எனக்கு சிவாஜி படம் நினைவுக்கு வந்தது. நீங்களே அடுத்த இடுகையில் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டீர்கள். நன்று

யூர்கன் க்ருகியர் said...

Waiting sir.

SUFFIX said...

பயனுள்ள தகவல்கள் தழுவிய ஒரு ஆராய்ச்சி கட்டுறை!! நன்றி

நேசமித்ரன் said...

நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு

கட்டபொம்மன் said...

//பிறகு அங்கிருந்து சிலையை எடுத்துக் கொண்டு நாயகன் அருகிலே வைக்க நாயகன்உயிர் பெறுகிறார்//


நாங்கள்லாம் நெஞ்சுல கத்திய குத்தியும் அரைமணி நேரம் வசனம் பேசியததையே பாத்தாச்சு இதென்ன ......

கட்டபொம்மன்
kattapomman.blogspot.com

sakthi said...

சரி ஒருவருக்கு இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் நின்று விட்டது என்று எவ்வாறு கண்டு பிடிப்பது?

ம்ம்ம்

சொல்லுங்க கேட்டுகிறோம்